வைரம், வைடூர்யம் போன்ற கற்களில் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அப்படி ஈர்க்கப்படும் ஆற்றல்களை, மனித உடம்பிற்குள் இந்த கற்கள் செலுத்தும் என்று அதர்வண வேதத்தில் படித்த போது எனக்கு வியப்பு வந்தது. வைரம் என்பது பளபளப்பானது. பார்க்க அழகானது. கண்ணை பறிப்பது போன்ற ஜொலிப்பு இருப்பதனால் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதனால் ஆபரணங்களில் அழகு சேர்ப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று தான் நிறைய நாள் எண்ணி வந்தேன். அப்படி எண்ணியது தவறு. அழகுக்காக மட்டுமல்ல ஆற்றல்களை உள்வாங்கி கொள்வதற்கும், இந்த கற்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல் ஆரம்பத்தில் வியப்பை தந்தாலும், பிறகு அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இந்த வேளையில் புலிக்கண் என்ற ஒரு கல் எனக்கு கிடைத்தது. அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் வைத்து, நான் அணிந்திருந்ததை பார்த்த என் சீடர் ஒருவர், அதை தான் அணிய வேண்டுமென்று விரும்பினார். அவரிடம் அதை கொடுத்திட்டேன்.
அதை அணிந்த அவருக்கு, இரண்டு நாட்கள் எந்த சிக்கலும் இல்லை. மூன்றாவது நாளிலிருந்து வயிற்று நோய் ஏற்பட்டு, மிகவும் அவதிப்பட்டார். ஐந்து நாட்களாக மருத்துவமனையில் இருந்தும், பல சிகிச்சைகளை செய்து பார்த்தும் எந்த பயனும் இல்லை. திடீரென்று எனக்கு அந்த கல் மோதிரத்தை அணிந்ததனால் இந்த பிரச்சனை வந்திருக்குமோ? என்று நினைத்து அதனால் அதை கழற்றச் சொல்லலாமே என்று நினைத்து, அவருக்கு தகவல் அனுப்பினேன். அவரும் நான் சொன்ன படி செய்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், புலிக்கண் மோதிரத்தை கழற்றிய சில மணி நேரங்களிலேயே அவருக்கு சுகம் கிடைத்தது.
இந்த சம்பவத்தை நேருக்கு நேராக அனுபவித்த பிறகு, கற்களில் எதோ ஒரு மகத்துவம் இருப்பதை தெரிந்து கொண்டேன். வேறு பல சம்பவங்களும், அதை எனக்கு உறுதிபடுத்தின.